திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 ம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த விபத்து, அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
இந்த எதிர்பாராத விபத்தில், அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மோகித் என்ற மாணவன், இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



