மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், உயர்கல்வி பயின்று வந்த 24 வயது எம்பிஏ (MBA) மாணவி குஷ்பு ராத்தோர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தனது கல்லூரி நண்பன் பியூஷ் தனோதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்ற குஷ்பு, அதன்பின் மாயமானார். மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் தேடி வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு ஒரு வாடகை வீட்டில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தூரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பியூஷின் வாடகை வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கு மாணவி குஷ்புவின் உடல் நிர்வாணமாகவும், உடல் அழுகிச் சிதைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. மாணவியின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டதற்கான ஆழமான தடயங்கள் இருப்பதால், அவர் கழுத்தை நெரித்து மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கொலை வழக்கின் பின்னணியில் ஆபாச வீடியோ விவகாரம் ஒன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. குஷ்பு கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது கல்லூரி வாட்ஸ்அப் குழுவில் அவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருந்த நபரின் முகம் எமோஜிகளால் மறைக்கப்பட்டிருந்தாலும், அந்த நபர் பியூஷாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வீடியோவை காட்டி மாணவியை மிரட்டியபோது, ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நாள் முதல் பியூஷ் தனோதியா தலைமறைவாக உள்ளார். தனது பிறந்தநாள் அன்றே சக தோழியை தனது வீட்டிற்கு வரவழைத்து இத்தகைய கொடூரத்தை செய்திருப்பது சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார், மொபைல் சிக்னல்களை கொண்டு பியூஷை நெருங்க முயன்று வருகின்றனர்.



