தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்குகிறது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த முக்கியத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இதற்காக தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,545 பள்ளிகளைச் சேர்ந்த 7,99,692 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுடன் தனித்தேர்வர்களாக 27,783 பேரும், சிறைவாசிகளாக 281 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். ஒட்டுமொத்தமாக 8,27,475 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் சொல்வதை எழுதுவதற்கு 7,465 ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல் தேர்வாக தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளில் மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, வருகிற மார்ச் 26-ஆம் தேதியுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைகின்றன. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளை தவிர்க்கவும், தேர்வை சீராக நடத்தவும் அரசுத் தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேர்வறை கண்காணிப்பாளர்களாக 44,624 ஆசிரியர்களும், பறக்கும் படையில் 4,540 அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றித் தேர்வு எழுதத் தேவையான குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



