தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும், இந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்று கல்வியை கற்பிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மற்ற இலவச பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தான், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது மறுகூட்டல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (ஜூன் 5) முதல் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை இன்று முதல் ஜூன் 7ஆம் தேதி வரை மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 செலுத்த வேண்டும். மற்ற பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.