சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் பொது தேர்வு எழுத 75 % வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் ஆகும். மருத்துவ அவசரநிலைகள், தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் மேலும் 25 சதவீத தளர்வு வழங்கப்படும். இதனை அனைத்து பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் என்பதாக கருதப்படும். அத்தகைய மாணவர்களை சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்காது. மேலும் வருகைப் பதிவுகளை முறையாக பராமரிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தால் அது குறித்த தகவலை பெற்றோருக்கு முறையாக தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக பள்ளி வருகையை தவிர்த்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் 75 சதவீத வருகை விதிமுறையை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. தற்போது, அதனை தீவிரமாக அமல்படுத்தும் நடவடிக்கையாக, இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read more: எமனாக வந்த நாய்.. தந்தை கண் முன்னே 4 வயது சிறுவன் துடிதுடித்து பலி..!! கடலூரில் சோகம்..