இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், இலங்கை கடற்கரைக்கு அருகே, ஒரு ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் (submarine) தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பிறகு 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது..
இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேரை காணவில்லை.. மேலும், 78 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறினர். இந்த தாக்குதல் இலங்கை கடற்கரைக்கு அருகே நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான முழு விவரங்களை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.” என்று தெரிவித்தார்..
இலங்கை கடற்படையின் மீட்பு நடவடிக்கை
மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி அனில் ஜாசிங்கே கூறுகையில், ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடம்,
7 பேர் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மற்றவர்கள் லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெரத் நாடாளுமன்றத்தில் பேசுகையில், 180 பேருடன் சென்ற ‘Iris Dena’ என்ற கப்பல் ஆபத்தில் இருப்பதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து, Sri Lanka Navy மற்றும் விமானப்படை விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இஸ்ரேல் – ஈரான் மோதல்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி காமெனெய்யின் மகனும், புதிய உச்ச தலைவர் என கருதப்படுபவருமான மோஜ்தபா காமெனி சமீபத்தில் நடந்த அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களில் உயிர்தப்பியுள்ளார். இந்த தகவலை இரண்டு ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த தாக்குதல்களில், அலி காமெனெய் உட்பட பல முக்கிய அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் உயிரிழந்தனர். ஈரான் ஆட்சியிலுள்ள சிலர், மோஜ்தபா காமெனெய்யை அவரது தந்தையின் பதவிக்கான வாரிசாக பார்க்கிறார்கள் எனவும் தகவல் கூறுகிறது.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் தண்டனை – ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை ஆதரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என ஈரானின் தலைமை நீதித்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் பேசிய கோலாம் ஹொசெய்னி மொஹ்சேனி எஜேஹீ, “தாக்குதல்களுக்கு ஆதரவாக பேசுவோர் அல்லது உதவுவோர் மீது வழக்கு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை வரை வழங்கப்படலாம்” என்று கூறினார்.
மேலும், கடந்த ஜனவரியில் நடந்த நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் நீதித்துறையின் முக்கிய கவனத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



