தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மழை குறைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தாலும், அது பருவமழைக்கான தீவிரத்துடன் இல்லை. இந்த இடைவெளிக்குப் பிறகு, தமிழகத்தில் கடந்த முன்தினம் முதல் வடகிழக்குப் பருவக் காற்று முழுவதுமாக வீசத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து 3 முக்கிய நிகழ்வுகளால் தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
முதல் நிகழ்வு :
வரும் 15-ஆம் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும். இதன் காரணமாக, 16-ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும்.
17 மற்றும் 18-ஆம் தேதிகளில்: ஒட்டுமொத்தக் கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும்.
18 மற்றும் 19-ஆம் தேதிகளில்: உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த தாழ்வுநிலை, பின்னர் வலுவடைந்து லட்சத்தீவு நோக்கிச் சென்றாலும், கிழக்கு திசைக் காற்றை ஈர்க்கும் என்பதால், 20-ஆம் தேதியன்றும் தமிழகத்தில் மழைக்கான சூழல் நிலவும்.
2ஆம் நிகழ்வு :
முதல் நிகழ்வு முடிவடைந்த பிறகு, 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். இது மேலும் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையைப் பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நிகழ்வுகளாலும், நவம்பர் 16 முதல் 25-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும். பெரிய வெள்ளப் பாதிப்புகள் இல்லாவிட்டாலும், நீர்நிலைகள் நிரம்பவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் இது உதவும்.
3ஆம் நிகழ்வு :
இவற்றைத் தொடர்ந்து, மூன்றாவது நிகழ்வாக தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி, அது புயலாக வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய இரண்டு நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே, இந்தச் சாத்தியமான புயலின் நகர்வு மற்றும் கரையை கடக்கும் இடம் பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.
Read More : 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை..!! முதல் நாடாக சட்டம் இயற்றியது ஆஸ்திரேலியா..!!



