தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.. திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் போட்டியிடுகிறது..
விசிக சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.. அப்போது சிதம்பரம் தொகுதி எம்பியாக உள்ள திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்..
இதுகுறித்து பேசிய அவர் “ நீண்ட நெடிய உளவியல் போராட்டங்களுக்கு பின்னர், பலரோடு கலந்து ஆலோசித்த பின்னர் தற்போது நிலவும் அரசியல் சூழலை அறிந்து எதிர்காலத்தை கணக்கில் கொண்டு எதிர்பார்த்தவர்களின் வருத்தங்களை நினைத்தும் வருத்தத்தோடு வேட்பாளர்களை அறிவித்தார்.
தமிழக அரசியலில் அதாவது மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது.. இந்த நிலையில் காட்டுமன்னார் கோயிலில் நான் போட்டியிடுகிறேன்..” என்று கூறியிருந்தார்.. ஆனால் எம்.பியாக இருக்கும் திருமாவளவன் ஏன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்..
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் மறு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.. திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டணி கட்சியினர் வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது..
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்த திருமாவளவன் தாக்கல் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவை இன்று மாலை திருமாவளவன் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது..



