தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சிறுநீரகக் கோளாறுகள் முதல் சரும நோய்கள் வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில், கோடை வெயிலின் பிடியில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சித்த மருத்துவர் காமராஜ் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கோடைக்காலத்தில் வியர்க்குரு, தேமல், உடல் கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் தோன்றுவது இயல்பானது. இதுமட்டுமன்றி, பலருக்குக் மலச்சிக்கல், மூல நோய், மஞ்சள் காமாலை மற்றும் அம்மை நோய்கள் தாக்கும் அபாயமும் உள்ளது. இதற்கெல்லாம் மூலகாரணமாக அமைவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே ஆகும். உடலில் இருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறுவது, போதிய அளவு தண்ணீர் குடிக்காதது மற்றும் தூக்கமின்மை ஆகியவை எதிர்ப்பு சக்தியைப் பெருமளவு குறைத்துவிடுகின்றன. எனவே, சரியான உணவைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதே நோய்களைத் தடுக்கும் முதல் அரண் என அவர் குறிப்பிடுகிறார்.
பாரம்பரிய உணவுகள் :
வெயிலைத் தணிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய ‘பழைய சோறு’ மற்றும் ‘நீராகாரம்’ சிறந்த மருந்து என்கின்றனர் சித்த மருத்துவர்கள். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் உடனடி ஆற்றலையும் வழங்குகிறது. எனினும், சைனஸ், ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த கோளாறுகள் உள்ளவர்கள் மற்றும் காய்ச்சல், சளி பாதிப்பு உள்ள காலங்களில் பழைய சோறு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, கோடையில் மலிவாகக் கிடைக்கும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களையும், இயற்கை பானங்களான இளநீர், பதநீர், நுங்கு மற்றும் நீர் மோரையும் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மண்பானை நீர் :
குளிர்சாதனப் பெட்டி நீரை தவிர்த்துவிட்டு மண்பானை நீரைப் பயன்படுத்துவது உடலுக்குப் பல நன்மைகளைத் தரும். மண்பானை தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழங்களைப் போட்டு வைத்துப் பருகுவது உடலின் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கும். இது குடல் புண்கள் வராமல் தடுப்பதுடன், செரிமானக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. சித்த மருத்துவர் காமராஜ் கூறும் இந்த எளிய உணவு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்த கோடைக்காலத்தை எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நம்மால் கடக்க முடியும்.
Read More : கோடையிலும் வாடாத மாடித் தோட்டம்..!! மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்க சூப்பர் டிப்ஸ்..!!



