சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை செய்ததாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘ரோஜாக்கூட்டம்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், அதிமுக ஐ.டி.விங் நிர்வாகி பிரசாத், ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பார்-லாஞ்சில் அடிதடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். பின்னர், பிரசாத் மீது பல்வேறு மோசடி புகார்களும், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த வழக்கில் பிரசாதும், பிரதீப் குமார் என்பவரும் கைதான நிலையில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதாக அவர்கள் சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்திடம் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீகாந்த், உண்மையாகவே போதைப்பொருள் பயன்படுத்தியதாக மருத்துவ ரிப்போர்ட் உறுதி செய்தால், அவரை கைது செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்றாலும், திரயுலகத்தையும், அவரது ரசிகர்களையும் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.