மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், சினிமா பாணியிலான ஒரு பழிவாங்கும் கொலை சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த 73 வயதான சூர்யநாராயணன் என்பவர், தனது சொந்த பங்களாவிலேயே மர்ம கும்பலால் மூச்சடைக்க செய்து கொல்லப்பட்டுள்ளார். இவரது மகள் விஷ்ணுபிரியா, சூர்யாவின் ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான துணை நடிகை ஆவார்.
இந்த கொலையின் பின்னணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு காதல் விவகாரமும், அதையொட்டி நடந்த ஒரு கூலிப்படை கொலையும் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த கதையின் வேர் 2018-ம் ஆண்டு தொடங்குகிறது. அப்போது தனது கணவரின் சிகிச்சைக்காக கொடைக்கானல் வந்திருந்த விஷ்ணுபிரியாவுக்கும், கார் ஓட்டுநர் பிரபாகரன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இந்த விவகாரம் தந்தை சூர்யநாராயணனுக்கு தெரியவரவே, அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஓட்டுநர் பிரபாகரன் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சூர்யநாராயணனே முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிலையில், அவர் கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவர் ரகசியமாக கொடைக்கானல் பங்களாவுக்கு வந்து தங்கியிருந்தது எதிர்தரப்புக்கு தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை சூர்யநாராயணனின் பங்களாவுக்குள் புகுந்த மர்ம கும்பல், அங்கு அவருக்கு துணையாக இருந்த ஆறுமுகம் என்பவரை தாக்கி கட்டிப்போட்டது. பின்னர் சூர்யநாராயணனை ஒரு நாற்காலியில் அமரவைத்து, அவரது முகம் முழுவதும் பிளாஸ்டர் டேப் மூலம் சுற்றி மூடியுள்ளனர். மூச்சுவிட முடியாமல் அவர் திணறியபோது, முகத்தை மேலும் அழுத்தி அவரைப் பரிசோதித்து உயிரிழந்ததை உறுதி செய்துகொண்ட பின்னரே அந்தக் கும்பல் தப்பியோடியுள்ளது.
அதிகாலையில் இதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர். தற்போது படுகாயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பிரபாகரனின் ஆதரவாளர்களே இந்தப் பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், துணை நடிகை விஷ்ணுபிரியா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால், அவரைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Read More : முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடு..!! தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியீடு..!!



