ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே நடந்த காதல் தகறாறு விவகாரத்தில் 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயராமன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தனது இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயராமன் தரப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் ஜெயராமன் மீதான இடைநீக்க உத்தரவை திரும்ப பெறப் போவதில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இடைநீக்கம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஜெயராமன் தொடர்புடைய விசாரணையை வேறு பிரிவுக்கு மாற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப்பிரிவு விசாரணைக்கு மாற்றுவது பற்றி தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும். சில உத்தரவுகளை பிறப்பத்து அதன்படி தான் நாங்கள் செயல்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் கட்டாயப்படுத்துவது போல் உள்ளது. எந்தெந்த வழக்குகள் என்பதை கூற விரும்பவில்லை என்றும் தமிழக அரசு தரப்பு வாதிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் சஸ்பெண்ட் செய்யவில்லை என்று கூறிய தமிழக அரசு, சட்ட விதிகளின் படியே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏடிஜிபி ஜெயராமன் தொடர்பான மற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறு அமர்வை அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஜெயராமன் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.