ஜூன் 29, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) என மொத்தம் 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
மேலும், இந்த தேர்வு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் தான், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பால் 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிஜிபி அலுவலகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக விளக்கங்கள் வரும் வரை ஜூன் 29, 29ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தேர்வுக்கான தேதி TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண் என்ற வகையில் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் தேர்வர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.