பிரதமர் மோடி இன்று 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்..
ஒரு இந்திய நடன நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்றதற்காக அந்த நடன நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இந்தியா விரைவில் மலேசியாவில் புதிய தூதரகத்தைத் திறக்கும் என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது என்றும், அப்போது 11வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, இப்போது முதல் மூன்று இடங்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா விரைவில் மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்காக திருவள்ளுவர் கல்வி உதவித்தொகையை வழங்கும் என்றும், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கைதான் இந்தியாவின் வலிமையான நாணயமாக மாறியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “இப்போது நாங்கள் முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான ஒரு மையமாக இருக்கிறோம். வளர்ச்சிக்கு நம்பகமான பங்காளியாக இந்தியா பார்க்கப்படுகிறது. அது இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அந்த நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன,” என்று கூறினார்.
“மலேசியாவில் உலகின் இரண்டாவது பெரிய இந்திய வம்சாவளி சமூகம் உள்ளது. இந்திய மற்றும் மலேசிய இதயங்களை இணைக்கும் பல விஷயங்கள் உள்ளன… நீங்கள்தான் எங்களை இணைக்கும் உயிருள்ள பாலம். நீங்கள் ரோட்டி கனாயை மலபார் பரோட்டாவுடன் இணைத்துள்ளீர்கள். தேங்காய், மசாலாப் பொருட்கள், நிச்சயமாக, தே தாரிக். கோலாலம்பூரில் இருந்தாலும் சரி, கொச்சியில் இருந்தாலும் சரி, அந்த சுவைகள் மிகவும் பரிச்சயமானவையாகத் தெரிகின்றன.
நாங்கள் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்கிறோம். இது நமது மொழிகளுக்கும் மலாய் மொழிக்கும் இடையே உள்ள ஏராளமான பொதுவான வார்த்தைகளால் இருக்கலாம். மலேசியாவில் இந்திய இசையும் திரைப்படங்களும் பிரபலமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிக நன்றாகப் பாடுவார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியாவில் உள்ள பல இந்தியர்களுக்கு அது தெரியாது. அவரது கடந்த கால வருகையின் போது, அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டனர். அவர் இந்தியாவில் ஒரு பழைய இந்திப் பாடலைப் பாடிய வீடியோக்கள் வைரலாகப் பரவின. அவர் புகழ்பெற்ற எம்.ஜி.ஆரின் தமிழ்ப் பாடல்களை விரும்புவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் “ தமிழ் கலாச்சாரம் உலகமயமானது, இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு தமிழர். அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல், முருகன் ஆகியோர் தமிழர்கள்.. மலேசிய பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும்.” என்று தெரிவித்தார்..



