சென்னையில் இருந்து சேலம் சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, விழுப்புரத்தில் இன்று அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், ” அதிமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.
பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த ஒரு மாபெரும் கட்சியாக அதிமுக இருக்கிறது.. எனவே, எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுப்போம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும். அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் அது எம்ஜிஆர், ஜெயலலிதா தான். அவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. அவர்கள் நம்மைத்தான் வாரிசுகளாக பார்த்தார்கள்.
அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அதிமுகவிற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்..” என்று தெரிவித்தார்..
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் உடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது இது முதல்முறையல்ல.. 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி விரைவில் தேர்தல் என்று தான் கூறிவருகிறார்.. அவர் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளதால், அடுத்த எந்த தேர்தல் வந்தாலும், அதில் தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.. பார்ப்போம்.. என்ன நடக்கும் என்று..