தமிழகத்தில் இன்னும் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கித் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் வீடுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்தத் தொகையானது மூன்று நிலைகளில் நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே வரவு வைக்கப்படும். பயனாளிகள் குறைந்தபட்சம் 360 சதுர அடி பரப்பளவில் தங்களது புதிய வீட்டைக் கட்டிக்கொள்ளலாம். கட்டுமானச் செலவைக் குறைக்கும் நோக்கில், அரசிற்குச் சொந்தமான ‘டான்செம்’ (TANCEM) நிறுவனம் மூலம் குறைந்த விலையில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
சொந்தமாகப் பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது குடிசை வீட்டில் வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். சொந்தமாக ஏற்கனவே கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்களோ அல்லது வீட்டின் ஒரு பகுதி ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு கட்டப்பட்டிருந்தாலோ அவர்கள் தகுதி பெற முடியாது. அதேபோல், புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்திருப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது. விண்ணப்பிக்க விரும்புவோர் நிலப்பத்திரம், ரேஷன் கார்டு, பட்டா-சிட்டா, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் தங்களது ஊராட்சியில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையிலான குழுவினர் வரப்பெற்ற விண்ணப்பங்களை ஆய்வு செய்வார்கள். தகுதியான பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியான நபர்கள் இருந்தால், முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.



