“குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட வேண்டும் என்ற இலக்கில், ஏற்கனவே ஒரு லட்சத்து 71 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக 3,500 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்த முக்கியப் புள்ளிவிவரங்களை வெளியிட்டு, திட்டத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.
மாவட்ட ரீதியாகப் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரிடையாகப் பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்குச் சென்று, பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் தகுதிகளை ஆய்வு செய்தார். குறிப்பாக, இருளர் குடியிருப்புகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, புதிய பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்புவோர் தங்களது கிராம ஊராட்சிகளில் மனு அளிக்கலாம் என்றும், கிராம சபையின் ஒப்புதலோடு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் உறுதிப்படுத்தினார்.
தற்போது மாநிலம் முழுவதும் பயனாளிகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, சொந்தமாக வீடுகட்ட திட்டமிட்டுள்ள ஏழை, எளிய மக்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அங்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் தகுதி வரம்புகள் குறித்த தகவல்களைப் பெற்று, அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய நிதியுதவியைப் பயன்படுத்தித் தங்களது கான்கிரீட் வீட்டுக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம். முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் பட்சத்தில், கிராம சபையின் பரிந்துரையின் பேரில் பயனாளிகளுக்கான நிதியுதவி நேரடியாக சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.



