பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட உணவுப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஏற்கனவே பரிமாறப்பட வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிவிக்கப்பட்டதன் படி உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்க வேண்டும். புதன்கிழமை காய்கறி சாம்பாறுடன் ரவா பொங்கல் அல்லது வெண்பொங்கல் வழங்க வேண்டும். அதேபோல் வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வகைகளையும், வெள்ளிக்கிழமை கிச்சிடி வகைகளையும் வழங்க வேண்டும் என அரசு முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் காலை உணவு திட்டத்தில் உள்ளூரில் விளையும் காய்கறிகளையும், சிறு தானியங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.