தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடி குறித்து இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.
தினமும் காலை சரியாக 10 மணிக்கு, லட்சக்கணக்கான இந்தியர்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு விஷயத்தை முயற்சிக்கிறார்கள்.. ஆம்.. இந்திய ரயில்வேயின் IRCTC போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது தற்போது எட்டாக்கனியாக மாறி உள்ளது. அவசர பயணத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய இந்த தட்கல் டிக்கெட் முறை தற்போது வெறுப்பூட்டும் செயலாக மாறியுள்ளது. IRCTC இணையதள பக்கம் முடக்கம், பேமெண்ட் கேட்வே செயலிழப்பு, நொடிகளில் மாயமாகும் ரயில் டிக்கெட்.. இவை தான் ரயில் பயணிகள் சமீப காலமாக சந்தித்து வரும் பிரச்சனைகள்..
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் இந்திய ரயில்வே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது..
இந்த பிரச்சனை பற்றி IRCTC என்ன சொன்னது?
ஜனவரி மற்றும் மே 2025 க்கு இடையில் மட்டும், முன்பதிவு சாளரங்கள் திறக்கப்பட்ட 5 நிமிடங்களுக்குள் உருவாக்கப்பட்ட 2.9 லட்சம் சந்தேகத்திற்கிடமான PNRகளை IRCTC கண்டறிந்தது. இது தெளிவான ஆன்லைன் மோசடி என்பது கண்டறியப்பட்டது.. இதை தொடர்ந்து அதிகாரிகள் அதிர்ச்சியூட்டும் 2.5 கோடி பயனர் ஐடிகளை செயலிழக்கச் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டனர்.. மேலும் 20 லட்சம் பயனர் ஐடிகளுக்கு மறு சரிபார்ப்பு கோரப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளில் பல, கணினியில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தும் முகவர்கள் அல்லது மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருந்தன.
தற்காலிக முகவரிகளைப் பயன்படுத்தி, இந்த நபர்கள் IRCTC இன் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக பல போலி கணக்குகளை உருவாக்கினர் என்பதும் கண்டறியப்பட்டது.. இதுபோன்ற மொத்தம் 6,800 டொமைன்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன.. மேலும் 134 புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டிக்கெட் பிளாக் சந்தை
அவசர பயணத் தேவைகள் உள்ளவர்களுக்கு தட்கல் முறை ஒரு உயிர்நாடியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பாட்கள் மற்றும் முன்பதிவு மாஃபியாக்களால் ஆளப்படும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. “நெக்ஸஸ்” மற்றும் “சூப்பர் தட்கல்” போன்ற சட்டவிரோத மென்பொருட்கள் மூலம் இந்த மோசடி நடைபெறுவதாக நம்பப்படுகிறது.. இந்த மோசடி தொழில்நுட்பம் மனிதர்களை விட வேகமாக உள்நுழைந்து, படிவங்களை நிரப்பி, பணம் செலுத்தும் திறன் கொண்டவை என்றும் கூறப்படுகிறது..
விளைவு? உண்மையான பயணிகள் சில நொடிகளில் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பு, 73% பயனர்கள் முதல் நிமிடத்திலேயே காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், 30% பேர் கைவிட்டு முகவர்களாக மாறியதாகவும் வெளிப்படுத்தியது. “தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவதை விட கடினம்.” என்று ஒரு சமூக ஊடக பயனர் கருத்து பதிவிட்டது இங்கு மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
IRCTC-ன் நடவடிக்கை என்ன?
தட்கல் முறைகேட்டை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பாகத் தயாராக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.. சந்தேகத்திற்கிடமான டொமைன்கள் மற்றும் ஐடிகளைத் பிளாக் செய்வதுடன் மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசலை சிறப்பாகக் கையாள IRCTC ஒரு முன்னணி உள்ளடக்க விநியோக நெட்வொர்க்குடன் இணைந்து பணியாற்ற உள்ளது.. இந்த கருவிகள் உண்மையான மனித பயனர்களுக்கும் தானியங்கி பாட்களுக்கும் இடையில் வேறுபடுத்த உதவுகின்றன.
தைரோகேரின் நிறுவனர் வேலுமணி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்பதிவு முறையை அணுகுவதில் தான் இதற்கு பதில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.. சர்வர் சுமைகளை நிர்வகிப்பதில் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10% ரயில்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும், இது சர்வர்களில் சுமையைக் குறைத்து, ஒவ்வொரு பயனருக்கும் நியாயமான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும் வேலுமணி பரிந்துரைக்கிறார்.
“பயணிகள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்வதற்குப் பதிலாக, நேரப்படி முன்பதிவு செய்ய ஏன் அனுமதிக்கக்கூடாது?” என்று அவர் IRCTC-ஐ டேக் செய்து பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், பல பயணிகள் இதுகுறித்து தங்கள் புகார்களை அடுக்கி வருகின்றனர்.
வேலுமணியின் பதிவிற்கு பதிலளித்த சந்தீப் சபர்வால். “நான் இதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். நான் பல வருடங்களாக ரயிலில் பயணம் செய்யவில்லை என்றாலும். எனது ஊழியர்களுக்கு பலமுறை முன்பதிவு செய்ய முயற்சித்தேன், 90% நேரமும் இதேபோன்று தோல்வியடைந்தேன், ஆனால் ஏசி தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே இன்னும் கிடைக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தட்கல் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளால் கோடிக்கணக்கான பயணிகள் தங்கள் பயணங்களை தவறவிடுவதுடன், முக்கிய பணிகளை செய்ய முடியாமல் தவிப்பதாக பதிவிட்டு வருகின்றனர்..