வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை, கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் துகாராம். இவர், வகுப்பறையில் உள்ள மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், கோபமடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறையில் புகார் செய்தனர். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த ஆசிரியரின் முகத்தில் மை தெளித்து, செருப்பு மாலை அணிவித்து அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிராம மக்களிடமிருந்து ஆசிரியரை மீட்டனர். அந்த ஆசிரியரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி கிராம மக்கள் காவல் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி பாசுதேவ் தெரிவித்துள்ளார்.