ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் வேலை செய்து வருகிறார் துகாராம். இவர் பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆறு மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர்களது பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் அந்த ஆசிரியரின் முகத்தில் மை தெளித்து செருப்பு மாலை போட்டு தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து அந்த ஆசிரியரை மீட்டனர். அந்த ஆசிரியரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பவேண்டும் என்று கோரி கிராம மக்கள் காவல் நிலையம் முன் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் அதிகாரி பாசுதேவ் தெரிவித்துள்ளார்.