ஒரு நாட்டின் வருங்கால தூண்களை உருவாக்க ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் இந்த சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை போற்றும் வகையில் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டை பொறுத்த வரை சிறந்த அறிஞராகவும் ஆசிரியராகவும் இருந்த இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளன்று மாணவர்கள் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பமாக ஆசிரியர் தினம் இருக்கிறது. தங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளை பல நிகழ்வுகள் நடத்தி மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாணவர்கள் மதிக்கிறார்கள்.
ஆசிரியர் தினம் வரலாறு: நம் நாட்டின் கல்வித் துறையில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1962-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நாட்டின் இரண்டாவது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த ஆசிரியர் தின கொண்டாட்டம் நாட்டில் தொடங்கப்பட்டது.
ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்த்தை பெற்று குடியரசு தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட, அவரது முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்களில் சிலர் அவரை அணுகினர். ஆனால் அவரோ செப்டம்பர் 5-ஐ தனது பிறந்தநாளாக கொண்டாடுவதற்குப் பதிலாக அந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கடைப்பிடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பணிவுடன் பரிந்துரைத்தார்.
சமுதாயத்தில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கையும், எதிர்கால இளைஞர்களை வளர்ப்பதில் அவர்கள் ஏற்றுள்ள மகத்தான பொறுப்பையும் அங்கீகரிப்பதற்காக தந்து பிறந்த நாள் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார். இவரது பரிந்துரையை உற்சாகமாக ஏற்று கொண்டது நம் தேசம், அப்போதிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி நாட்டின் கல்வியாளர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக ஆசிரியர் தினத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம்: மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இருப்பதால் ஆசிரியர் தினம் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவத்தை வகிக்கிறது. மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக மாற, அவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை கற்பிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றனர் ஆசிரியர்கள். சமூக முன்னேற்றம் மற்றும் தனிமனித மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கும் நிலையில், ஆசிரியர் தினம் அவர்களின் மகத்தான பொறுப்பை அங்கீகரிக்க மற்றும் அவர்களை கவுரவிக்க வாய்ப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஒரு நாளாக இருக்கிறது.
Readmore: பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தினமும் 52 நிமிடங்கள் கிசுகிசு பேசுகிறார்களாம்!. ஆய்வில் தகவல்!.