அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை..
இஸ்ரேல் மீண்டும் ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்கியுள்ளது. அதே நேரத்தில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளுக்கும் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் லெபனானின் தலைநகர் பெய்ருட் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் நக்சிவன் பகுதியில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அஜர்பைஜான் கூறியுள்ளது. அசர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நக்சிவனில் உள்ள விமான நிலையம் அருகே ஒரு ட்ரோன் விழுந்ததாகவும், மேலும் ஒரு பள்ளி அருகே இன்னொரு ட்ரோன் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அஜர்பைஜான் அரசு கடுமையாக கண்டிக்கிறது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, அஜர்பைஜான் அரசு ஈரான் தூதரை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. “இஸ்லாமிய குடியரசான ஈரான் நிலப்பரப்பில் இருந்து ஏவப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலால் விமான நிலைய கட்டிடம் சேதமடைந்ததுடன் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் குண்டுவெடிப்பு
இதனிடையே கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் கல்ஃப் பகுதிகளில் விரிவான பதிலடி தாக்குதல்களை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தோஹா நகரம் ஈரான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் பல தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது என்று கூறப்படுகிறது.



