நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பரும், ‘கொலைகாரன்’ படத்தின் இயக்குநருமான ஆண்ட்ரூ லூயிஸ் கலந்துகொண்டு பேசினார்.
விஜய் ஆண்டனியுடனான தனது நட்பு குறித்துப் பேசிய ஆண்ட்ரூ லூயிஸ், “நானும், விஜய்யும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். அப்போது அவரை நான் ‘ராஜா’ என்றுதான் அழைப்பேன்” என்று கூறி வியப்பை ஏற்படுத்தினார்.
மேலும், விஜய் ஆண்டனிக்கு நடந்த விபத்துகள் குறித்தும் அவர் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “பிச்சைக்காரன் படத்தில் நடிக்கும்போது அவருக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த விபத்தில் சிக்கி அவர் 4 நாட்கள் கோமாவில் இருந்தார்” என்றார்.
கல்லூரி முடித்த பிறகு, ஒருமுறை விஜய் ஆண்டனி அவரை ஸ்பென்சருக்குச் செல்ல அழைத்ததாகவும், ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் ஆண்ட்ரூ கூறினார். “அவர் அழைத்த அன்றுதான் அவருக்கு ஒரு விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து நான் இரண்டு மாதங்கள் கழித்துதான் இன்னொரு நண்பர் மூலம் தெரிந்துகொண்டேன். அந்த விபத்தில் அவர் நான்கு நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்த பிறகும், இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல துறைகளிலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து முன்னேறி வருவதாகப் பாராட்டினார். “விஜய் ஆண்டனி தனது உழைப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்” என்று கூறி தனது பேச்சை முடித்தார்.
Read More : சனிப்பெயர்ச்சி..!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி..? யாருக்கெல்லாம் பண மழை கொட்டும்..?



