நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் பாபிரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்க உறைவிடப் பள்ளியை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கி அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 ஆசிரியர்களை கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள அக்வாரா பகுதியில் செயின்ட் மேரீஸ் என்ற தங்கும் வசதியுடன் கூடிய கத்தோலிக்க பள்ளி செயல்படுகிறது. யெல்வா மற்றும் மோக்வா நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை அருகே உள்ள இந்த மேல்நிலைப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் மற்றும் விடுதி கட்டங்கள் உள்ளன. இந்தநிலையில், நேற்று காலை ஆயுதம் ஏந்திய கும்பல் பள்ளிக்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 ஆசிரியர்களை அந்த கும்பல் கடத்தி சென்றதாகவும், சில குழந்தைகள் தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர், ஆனால் 7 வயதுக்குட்பட்ட பலர் அருகிலுள்ள புதர்களுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவலை நைஜர் மாநில அரசு செயலர் அபுபக்கர் உஸ்மான் உறுதி படுத்தியுள்ளார். எனினும் எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
கடத்தல் சம்பவத்தை அடுத்து, பள்ளியை சுற்றி ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப் பட்டனர். முன்னதாக கடந்த, 17ல் கெப்பி மாநிலத்தில் உள்ள மகா பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கி, 25 மாணவியரை கடத்தி சென்றது. இந்த இரு தாக்குதலுக்கும் எந்த கும்பலும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
Readmore: மீனவ இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு… அரசு சார்பில் இலவச UPSC பயிற்சி வகுப்பு…!



