திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது ‘நினைத்தாலே முக்தி’ தரும் அந்த மகா திருத்தலத்தின் மகிமைதான். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் இங்கு, சிவபெருமானே மலையாக காட்சியளிப்பதால், இம்மலையைச் சுற்றி வரும் கிரிவல வழிபாடு கைலாய மலையை வலம் வருவதற்கு நிகரானதாக கருதப்படுகிறது. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் அரூபமாக உலவும் இந்த ஆன்மீக பூமியில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வது குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
பொதுவாகவே தை மாதம் என்பது சூரிய பகவான் வடக்கு நோக்கிப் பயணிக்கும் உத்திராயண காலத்தின் தொடக்கமாகும். தேவர்களின் விடியற்காலமாக கருதப்படும் இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள், முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியையும் பெற்றுத்தரும் என்பது ஐதீகம். அந்த வகையில், முருகப் பெருமானுக்குரிய தைப்பூச திருநாளும், பௌர்ணமியும் இணைந்து வரும் இந்த தை மாத பௌர்ணமி கிரிவலம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் மலையாக வலம் வந்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும்.
இந்த ஆண்டு தை மாதப் பௌர்ணமி பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. பௌர்ணமி திதியானது பிப்ரவரி 1 அதிகாலை 04:41 மணிக்குத் தொடங்கி, பிப்ரவரி 2 அதிகாலை 04:43 மணி வரை நீடிக்கிறது. பக்தர்களின் வசதிக்காகத் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் கிரிவலத்திற்கான உகந்த நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 05:34 மணி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாலை 04:05 மணிக்குள் கிரிவலத்தை நிறைவு செய்வது உத்தமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேஷமாக, இந்த ஆண்டு பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஆன்மீக ரீதியாக இதற்குப் பல கூடுதல் பலன்கள் உண்டு. சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் கிரிவலம் செல்வது உடலில் நேர்மறை ஆற்றலை (Positive Energy) அதிகரிக்கும்; தீராத நோய்களைத் தீர்க்கும் வல்லமை கொண்டது. மேலும், பதவியில் உயர்வு பெற விரும்புவோர்க்கும், வாழ்வில் உயர்ந்த நிலையை அடையத் துடிப்போர்க்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, அண்ணாமலையாரின் அருளைப் பெறத் துடிக்கும் பக்தர்கள் இந்த உன்னத நேரத்தை தவறவிடாமல் கிரிவலப் பயணத்தைத் திட்டமிடலாம்.
Read More : கிரெடிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு..! இனி ரிவார்டு புள்ளிகள் கிடைக்காது..! பிப்., 1 முதல் புதிய விதிகள்..!



