2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.. தனது வித்தியாசமான கதை, திரைக்கதை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்ததால் இப்படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. இதையடுத்து கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய கைதி படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.. மாநகர, கைதி படங்களின் வெற்றி மூலம் லோகேஷ் கனகராஜ்க்கு நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவர் இயக்கிய மாஸ்டர் படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது..

இப்படி ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.. இதையடுத்து உலக நாயகனை வைத்து லோகேஷ் இயக்கிய படம் விக்ரம்.. இப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது..
தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் தற்போது மீண்டும் விஜய்யுடன் கை கோர்த்துள்ளார்.. தற்காலிகமாக ‘ தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்க உள்ளார்.. இது தான் சஞ்சய் தத் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகும்.. இவர்கள் தவிர அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது..
லோகேஷ் சினிமேட்டிக் யுனிவெர்ஸின் ஒரு பகுதியாக இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.. சமீபத்தில் பேசிய லோகேஷ் கனகராஜ், பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறியிருந்தார்..
இந்நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.. அதற்கான டீசர் வீடியோவை உருவாக்கி உள்ளதாம்.. அதற்கான பணிகள் முடிந்துவிட்டதாகவும் இந்த புரோமோ வீடியோ வரும் 3-ம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் டைட்டிலும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.