அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனையின் தாயார் உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்டவீராங்கனை பிரியாவுக்கு மூட்டு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூட்டு தசை கிழிந்துவிட்டதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சரியாகிவிடும் எனக் கூறி அந்த வீராங்கனைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மூன்று நாட்கள் ஆகியும் வலி அதிகமானது. இதனால் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பிரச்சனை பெரிதாகி இருப்பது தெரியவந்ததால் கால்களை உடனடியாக அகற்றி உள்ளனர். விரைவில் வீடு திரும்பிவிடுவோம் என நினைத்திருந்த நிலையில் கால்களையும் எடுத்துவிட்டதால் நம் குழந்தை உயிராவது மிஞ்சும் என நினைத்து பெற்றோர்கள் மனதை தேற்றிக்கொண்டனர்.
இந்நிலையில் வலி அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தாயார், ’’ அந்த மருத்துவமனையில் காலை வெட்டி எடுத்தார்கள், இந்த மருத்துவமனையில் உயிரையே எடுத்து விட்டார்கள். என் மகள் சென்றுவிட்டாள். எங்களிடம் திரும்ப வரமாட்டாள்.’’ என கதறி அழுதனர்.
மாணவியின் தந்தை கூறுகையில், ’’ பெரியார் நகர் மருத்துவமனையில் என் மகளை ஒரு வாரம் சிகிச்சைக்கு வைத்திருந்தனர். காப்பீட்டுத் திட்டத்தின் ஒப்புதல் வர வேண்டும், பின்னர் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்றனர். பின்னர் அவவை சிகிச்சைக்காக காலை பெரிய அளவில் கிழித்தனர். நரம்புகளை அறுத்தனர். ரத்தம் அதிகமாக வந்ததால் இறுக்கமாக கட்டியுள்ளனர். பின்னர் ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்திருந்தனர். உடனே வேறு வார்டுக்கு அனுப்பினார்கள். போதுமான மருந்துகள் இல்லை எனவே ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என அவர்கள் கூறியதால் இங்கு வந்தோம். அப்போது என் மகள் நடந்து தான் வந்தாள். ஆனால், இப்போது அவள் உயிருடன் இல்லை’’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.