திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. உள்ளே இருந்து சத்தமாகப் பேச்சுக்குரல்களும், கும்மாள சத்தமும் கேட்டதையடுத்து, பொதுமக்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
கதவு திறக்கப்பட்டபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். சுமார் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தம் 9 பேர் மது போதையில் தள்ளாடியபடி இருந்துள்ளனர். விசாரணையில், அங்குள்ள ஒரு சிறுமி தனது உறவினருக்கு சொந்தமான வீட்டின் சாவியைப் பயன்படுத்தி, தனது நண்பர்களை அழைத்து மது அருந்தியது அம்பலமானது.
இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போதையில் இருந்த மாணவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் இந்த விபரீத செயலை கண்டு நிலைகுலைந்து போயினர். இதையடுத்து, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்ட காவல்துறையினர், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், தீவிரமான எச்சரிக்கை மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Read More : திமுகவில் வாரிசுப் போர்..!! கனிமொழி vs சபரீசன்..!! குடும்ப மோதலால் பரபரக்கும் தென் மாவட்டங்கள்..!!



