நாடு முழுவதும் இணையவழி மோசடிகள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பங்குச் சந்தை லாபம், பரிசு வென்றதற்கான செய்தி, வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி OTP கேட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒருவர் மற்றொருவரை அழைக்கும் போது “இணையவழி குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்…” எனும் வாய்ஸ் மெசேஜ் ஒலிக்கும் நடைமுறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு மெசேஜ், தினமும் பலமுறை ஒலிப்பதால், அவசர தேவையில் ஒருவர் போனை அழைக்கும் போது நேரத்தை வீணாக்குகிறது என்பதுடன், பாரத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இணையதளத்தில் மற்றும் தொலைபேசி சேவை நிறுவனங்களிடம் புகார்கள் அளித்தனர்.
மக்களின் புகாரை ஏற்று, வாய்ஸ் மெசேஜ் ஒலிக்கும் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. புதிய திட்டத்தின் படி: நாளுக்கு இரு முறை மட்டுமே இந்த மெசேஜ் ஒலிக்கும். மேலும், முழுமையாக வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை நீக்குவது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இத்தகைய விழிப்புணர்வு முயற்சிகள் பொதுமக்களை இணையதள மோசடியில் சிக்காமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில், அவசர அழைப்புகள் செய்யும் பொழுது பயனர்களுக்குத் தடை இல்லாதவாறு மெசேஜ் ஒலிக்கும்படி சீரமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
* அறிமுகமற்ற நபர்களின் அழைப்புகள், OTP கேட்பவர்கள், சந்தேகமான லிங்குகள் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
* ஏதேனும் சந்தேகமுண்டானால் www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
* எப்போதும் உங்கள் போனில் பாதுகாப்பு அம்சங்களை (app permissions, messages, updates) சரிபார்க்க வேண்டும்.