ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். இந்த இளைஞர், கடந்த 2021ஆம் ஆண்டு நொய்டாவை சேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு வருமாறு அந்தப் பெண்ணை அவர் அழைத்துள்ளார். பின்னர், அங்கு ஒதுக்குப்புறமாக அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, அவருக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
அந்த இனிப்பை சாப்பிட்டவுடன், அந்த பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை சாதகமாக்கிக் கொண்ட அந்த இளைஞர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவரை நிர்வாணமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து, அந்த புகைப்படத்தை காண்பித்து அடிக்கடி அவரை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் அந்த இளைஞரின் தொல்லை தாங்க முடியாமல், அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி அந்த இளைஞரை கைது செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த இளைஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் பிவி நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், “புகார் கொடுத்த பெண் தானாக முன்வந்து அந்த இளைஞருடன் சென்றுள்ளார். பிறகு, எப்படி டெல்லி காவல்துறை பலாத்கார வழக்குப் பதிவு செய்தது..? ஒரு கையை தட்டினால், ஓசை வராது. அந்தப் பெண் ஒன்றும் குழந்தை அல்ல.
அவருக்கு 40 வயது ஆகிறது. அவர் 7 முறை ஜம்முவுக்கு சென்றுள்ளார். இதுபற்றி அவரது கணவரும் கவலைப்படவில்லை. பிறகு ஏன் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளீர்கள்..? 9 மாதங்களாக இந்த இளைஞர் சிறையில் உள்ளார். இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. இது இடைக்கால ஜாமீன் வழங்க பொருத்தமான வழக்கு தான். இளைஞர், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட வேண்டும். அதை அவர் தவறாக பயன்படுத்தக் கூடாது. அந்த பெண்ணை தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கக் கூடாது” என்று தெரிவித்தனர்.