கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் 18-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. ”ஈ சாலா கப் நம்தே” என முழங்கி வரும் ஆர்சிபி, பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், கோப்பையை வென்றதில்லை.
இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை தேசிய அணிக்கு விளையாடாத வீரர்களையே அதிகம் கொண்டுள்ளது. அதிலும் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் பட்டாசாக வெடித்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து வந்தனர். இவர்களை எல்லாம் வழிநடத்தும் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐய்யர் இருக்கிறார். “தலைவன்டா” என எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வருகிறார். அதற்கு 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக அவர் ஆடிய ருத்ரதாண்டவமே சாட்சி.
அதேநேரத்தில், கடந்த 18 ஆண்டுகளாக கோப்பை கனவோடு வலம் வருகிறது ஆர்சிபி. கிறிஸ் கெயில், டி.வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என அதிரடி வீரர்களுடன், கிங் கோலி 18 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்க்காக விளையாடி வருகிறார். ஆனால், ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. நடப்புத் தொடரில் சால்ட் மற்றும் கோலி அதிரடி தொடக்கம் தரும் நிலையில், கேப்டன் பட்டிதார், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் அதற்கு வலு சேர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே, காயத்தால் அவதியடைந்த அதிரடி ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட், தற்போது குணமடைந்திருப்பது ஆர்சிபிக்கு கூடுதல் பலம் தான். பந்துவீச்சில் ஹேசல்வுட் தலைமையில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார், யஷ் ஆகியோரும் எதிரணிகளை பந்தாடி வருகின்றனர். இவர்களுக்கு துணையாக சுயாஷ் சர்மாவும் கலக்கி வருகிறார். கேப்டன் பொறுப்பை ஏற்றப் பிறகு 3 அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் ஷ்ரேயஸ்.
அதிலும், கடந்தாண்டு கொல்கத்தாவுக்கு கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். அதேநேரத்தில் எதிர்பக்கத்தில் 18 ஆம் எண் ஜெர்சியுடன், 18 வருடங்களாக ஐபிஎல் கோப்பை என்ற ஏக்கத்துடன் நிற்கிறார் விராட் கோலி. இந்த ஜாம்பவானுக்காகவாவது ஆர்சிபி ஒரு முறை கோப்பையை வெல்லட்டும் என்ற அனுதாப அலையும் பெரிதாக வீசிக் கொண்டிருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும், இன்றைய இறுதிப் போட்டியில் வெல்லும் அணி, ஐபிஎல் தொடரில் புதிய சாம்பியன் என்ற பட்டத்துக்கு சொந்தமாகப் போகிறது.
Read More : “யார் அந்த சார்”..? சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதியின் தீர்ப்பு..!! வெளியானது முழு விவரம்..!!