பிரபல மிமிக்ரி கலைஞரும், நடிகருமான கலாபவன் நிஜு, ‘காந்தாரா 2’ படத்தின் படப்பிடிப்பின் போது பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார்.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் பான் இந்தியா வெற்றி படமாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னட திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இப்படத்தில் சப்தமி கவுடா, அச்யுத் குமார், கிஷோர் குமார் ஜி, பிரகாஷ் துமிநாட் மற்றும் மானசி சுதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பூத கோலா என்ற சிறு தெய்வ வழிபாடு குறித்தும், மனிதர்களுக்கும் காடுகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து பேசிய படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. வெறும் ரூ.14 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.450 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து காந்தாரா சேப்டர் 1 என்ற பெயரில் ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். காந்தார படத்தின் ப்ரீகுவலாக அதாவது முன் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
காந்தாரா புதிய பாகத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல மிமிக்ரி கலைஞரும், நடிகருமான கலாபவன் நிஜு, ‘காந்தாரா 2’ படத்தின் படப்பிடிப்பின் போது பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார்.
கலாபவன் நிஜு ஜூனியர் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது கடுமையான மார்பு வலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பால் இறந்தார்.
இந்த துயர சம்பவம் கடந்த வியாழக்கிழமை பெங்களூருவில் நடந்தது. தற்போது அங்கு தான் காந்தாரா 2 படம் தற்போது படமாக்கப்படுகிறது. கலாபவன் நிஜு கடந்த 25 ஆண்டுகளாக மிமிக்ரி கலைஞராக இருந்து வருகிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மிமிக்ரி கலைஞர்களின் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ரோட்ஷோவின் போது அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து நடிகராக மாறிய அவர் உன்னி முகுந்தன், சைஜு குருப் மற்றும் தேவ நந்தாவுடன் ‘மாலிகப்புரம்’ போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்ததற்காக அவர் அங்கீகாரம் பெற்றார். மேலும் அவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மார்கோ’ என்ற அதிரடி படத்திலும் நடித்திருந்தார்.
எனினும் காந்தாரா படப்பிடிப்பில் உயிரிழப்பு ஏற்படுவது இது முதன்முறை அல்ல.. சில வாரங்களுக்கு முன்பு, கன்னட நடிகரும் நகைச்சுவை நடிகருமான ராகேஷ் பூஜாரி 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.. நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
காந்தாரா படத்தில் பணிபுரிந்து எம்.எஃப். கபில் என்ற துணை நடிகர் கடந்த மாதம் கேரளாவில் சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு ‘ஹோம்பேல் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் இரங்கல் தெரிவித்திருந்தது. தற்போது காந்தாரா படத்தில் 3வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காந்தாரா படத்தில் பணிபுரியும் நபர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் இது பஞ்சுருளி தெய்வத்தின் கோபமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Read More : பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..