புதுடெல்லி, பயங்கரவாத செயல்களை செய்து, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. அந்த அமைப்புக்கு ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் மீதான ஐந்தாண்டு தடைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சில பேர் செய்த குற்றங்களுக்காக ஒரு அமைப்பைக் குறை சொல்ல கூடாது என ஓவைசி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ” நான் எப்போதும் பி.எப்.ஐ-யின் அணுகுமுறையை எதிர்த்து, ஜனநாயக அணுகுமுறையை ஆதரித்து இருக்கிறேன். இருப்பினும் பி.எப்.ஐ மீதான இந்த தடையை ஆதரிக்க முடியாது. குற்றம் செய்யும் சில பேரின் செயல்களால் அந்த அமைப்பையே தடை செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை.
ஒருவரைக் குற்றவாளியாக கருத ஒரு அமைப்போடு தொடர்பு கொள்வது மட்டும் போதாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது ஆனால் இந்த மாதிரியான கடுமையான தடை ஆபத்தானது. ஏனெனில் இந்த தடை தனது கருத்தை சொல்ல விரும்பும் இஸ்லாமியர் மீதான தடையாகும். காஜா அஜ்மேரி குண்டுவெடிப்புக் குற்றவாளிகளுடன் தொடர்புடைய அமைப்புகள் இயங்கி வரும் போது பி.எப்.ஐ அமைப்பு மட்டும் ஏன் தடை செய்யப்பட்டது. வலதுசாரி பெரும்பான்மை அமைப்புகளை அரசாங்கம் ஏன் தடை செய்யவில்லை” என கூறியுள்ளார்.