தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தாண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. மாமலப்புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த விழா நடைபெறுகிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மல் பரிசாகவும், மாணவருக்கு வைர மோதிரமும் தவெக தலைவர் விஜய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, 2, 3ஆம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அதன்படி, 600 மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் பரிசளிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “இதுவரைக்கு ஊழலே செய்யாதவர்களை அடுத்தாண்டு தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும். நல்லவர்கள், நம்பிக்கையானவர்களை தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். அடுத்த வருடம் வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தைக் கொட்டப் போகிறார்கள். அது அனைத்துமே உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “யுபிஎஸ்சி தேர்வில் பெரியாருக்கே சாதி சாயம் பூசப் பார்க்கிறார்கள். பெரியாருக்கு சாதி சாயம் பூச முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது” என்றார். மேலும், பிள்ளைகளுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதற்கேற்றபடி அவர்களை பெற்றோர்கள் வழிநடத்த வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அவர்களுக்கு பிடித்தமான துறைகளில் அவர்கள் சாதிப்பார்கள்” என்று தெரிவித்தார்.