2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.. இந்த முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்று அதிமுக பாஜக கூட்டணி பணிகளை தொடங்கி உள்ளது.. குறிப்பாக பாஜக திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது..
இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வந்தார்.. இதையடுத்து சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இடையே சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.. அதிமுக தரப்பில் கே.பி முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.. அதே போல் பாஜக தரப்பில் எல். முருகன், அரவிந்த் மேனன், அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இருந்தனர்..
இந்த நிலையில் இபிஎஸ் – பியூஷ் கோயல் சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பாஜக பொறுத்தவரை 50 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் கடந்த முறை போலவே 20 தொகுதிகள் என அதிமுக பேரத்தை தொடங்கி உள்ளது.. குறைந்தது 30 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.. அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கலாம் என்று அதிமுக தரப்பு கூறியதாக தெரிகிறது..
மேலும் கூட்டணியை வலுப்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. இன்றைய பேச்சுவார்த்தையில் நடந்த முக்கிய அம்சன்கள் குறித்து பியூஷ் கோயல் குறிப்பெடுத்து கொண்டதாகவும், அவர் அமித்ஷாவிடம் எடுத்து சொல்ல உள்ளதாகவும், அமித்ஷா ஆலோசனையை பெற்று விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. எனவே அதிமுக – பாஜக இடையே விரைவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது..
Read More : விஜய் காரை முற்றுகையிட்ட தவெகவினர்.. பனையூரில் பரபரப்பு..!



