நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, 7-ஆம் வகுப்பு பயிலும் 12 வயது பழங்குடியின சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்னூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் அந்த சிறுமி, நாள்தோறும் பள்ளிக்கு நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட லிங்கன் (30) என்ற வாலிபர், சிறுமியிடம் நைசாகப் பேசிப் பழகியுள்ளார். வயது வித்தியாசமின்றி அந்தச் சிறுமியிடம் காதலிப்பதாக கூறி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் பழக்கம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லிங்கன், “உன் வீட்டில் நம்மைப் பிரித்துவிடுவார்கள், என்னுடன் வந்துவிடு” என சிறுமியை மூளைச்சலவை செய்துள்ளார்.
ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த சிறுமியை, தனது ஆசை வார்த்தைகளால் லிங்கன் சம்மதிக்க வைத்துள்ளார். கடந்த ஜனவரி 28-ஆம் தேதி, சிறுமியின் தந்தை வேலைக்கும், தாய் ரேஷன் கடைக்கும் சென்ற நேரத்தை பயன்படுத்திக் கொண்ட லிங்கன், வீட்டிலிருந்த சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு திரும்பிய தாய், மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்களுடன் தேடியும் பலனில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், லிங்கன் அந்தச் சிறுமியை தூக்கிக்கொண்டு கூடலூர் பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அங்கு ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்துச் சிறுமியை தங்க வைத்திருந்த லிங்கனை, போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சுற்றி வளைத்தனர். இதையடுத்து, சிறுமியை பாதுகாப்பாக மீட்ட போலீசார், லிங்கனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : தமிழ்நாட்டில் சிக்கிய மெகா பாலியல் கும்பல்..!! ரெய்டில் சிக்கிய ஐடி இளம்பெண்கள்..? ஆடிப்போன காவல்துறை..!!



