கையில் செல்போன் இருந்தாலே யூடியூப் சேனல் தொடங்கிவிடலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. இதனால் பலரும் இஷ்டத்துக்கு வீடியோ வெளியிட்டு போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால், உண்மை பின்தள்ளப்பட்டு பதற்றம், வன்முறை சம்பவங்கள் நிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான முகப்புப் படங்களும் வைத்து வீடியோக்கள் குறித்து பரப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது மேலும் 110 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மையை சரிபார்க்கும் பிரிவு, 1,160 செய்திகள் பொய்யானவை என்று கண்டுபிடித்துள்ளது. மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும், தாமாக முன்வந்தும் செய்திகளின் உண்மைத்தன்மையை இந்தப் பிரிவு பரிசோதிக்கிறது என அவர் தெரிவித்தார்.