பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) மாதிரிப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகள் மீண்டும் தொடங்கவுள்ளது.
அதேபோல், ஹரியானா மாநிலத்தின் அவசர கால தயார் நிலை மற்றும் பதிலளிப்பு திறனை மேம்படுத்த இன்று (மே 29) 22 மாவட்டங்களில் ’ஆபரேஷன் ஷீல்ட்’ என்ற பெயரில் சிவில் பாதுகாப்பு பயிற்சியை நடைபெறவுள்ளது. இதில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுமிதா மிஸ்ரா, தேசிய மாணவர் படை, நேரு யுவ கேந்திர சங்கதன் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்தப் பயிற்சியின் போது, மருத்துவமனைகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து மற்ற இடங்களில் 15 நிமிடங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தால், மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தொடர்பான ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், இரவு நேர தாக்குதலின்போது, மின்விளக்குகளை அணைக்க வேண்டும், ஜன்னல்கள் அருகில் நிற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதேபோல், அனல் மின் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்த பயிற்சியானது, போர் தொடர்பான அவசர நிலைகளுக்கு மக்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பதை நோக்கமாக கொண்டது. மின் தடைகள், வான்வழித் தாக்குதல் தொடர்பாக சைரன்கள் ஒலித்தல், பொதுமக்கள் வெளியேற்றும் நெறிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.