ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார்.
தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடித்தது. பாமக தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவி, மகள் வழி பேரன் முகுந்தனுக்கு கொடுத்தார் ராமதாஸ். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி.
இதற்கிடையே, பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, அவருக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தார் ராமதாஸ். இது அன்புமணி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. மேலும், அன்புமணி தனது தாயை அடித்தவர் என்றும் பொய் சொல்வதில் வல்லவர் என்றும் மகன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்நிலையில், கட்சியில் நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பது என இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதா..? இல்லையா..? என்பது குறித்து வியாழக்கிழமை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால், அன்புமணியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் தான், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக சார்பில் நேற்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி, ”வன்னியர் சங்கமும், பாமகவும் தொய்வின்றி மக்கள் பணியாற்ற தயாராகிவிட்டன. கட்சி, சங்கத்தை உருவாக்கியது ராமதாஸ் தான். அவர்தான் எப்போதுமே கட்சிக்கு தலைவர். அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் இதுவரை எந்த சலசலப்பும் இல்லை.
பாமக தலைவர் அன்புமணி கிடையாது என்று ராமதாஸே சொல்லிவிட்டார். பிறகு ஏன் நான்தான் தலைவர் என்று அன்புமணி சொல்லிக் கொண்டு இருக்கிறார்..? ராமதாஸ் பேச்சைக் கேட்டு நடந்தால், அன்புமணிக்கு பாமகவில் முக்கியத்துவம் கிடைக்கும். அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார். எனவே, எங்களுடன் சேர்ந்து ராமதாஸை தலைவராக அன்புமணி ஏற்றுக் கொண்டால், அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.