வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அருகே உள்ள கிராமம் தேவிசெட்டிகுப்பம். இங்கு வசித்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன் மணிகண்டனுக்கு 30 வயது ஆகிறது. இவர், இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகள் ஹேமலதா (22) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. ஹேமலதா திருமணம் ஆன சில மாதங்களிலேயே கர்ப்பம் ஆனார். இதற்கிடையே, அவரது கணவர் மணிகண்டன் பணிக்கு சென்று விட்டார். இதனால் ஹேமலதா திருமணம் ஆன 3-வது மாதமே தலை பிரசவத்திற்காக ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில, ஹேமலதாவிற்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து ஹேமலதா தனது கணவனிடம் கூறி மகிழ்ந்தார். இந்நிலையில், மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மனைவி மற்றும் குழந்தையை பார்த்த மணிகண்டன் குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை எனக்கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது கடும் ஆத்திரத்துடன் மிருகத்தனமான செயலில் இறங்கியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துள்ளார். பின்னர் மணிகண்டன் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்தம் கொட்டியபடி வலி தாங்காமல் பச்சிளம் குழந்தை கதறியது. இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர். பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, தந்தையே கழுத்தை அறுத்த சம்பவம் அணைக்கட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.