உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவனைத் துண்டு துண்டாக வெட்டி, கிரைண்டரில் அரைத்து வீசிய மனைவியின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பல் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்கள், ஒரு திட்டமிடப்பட்ட கொலையின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
சம்பல் மற்றும் சந்தௌசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிதறிக்கிடந்த உடல் பாகங்களை மீட்ட காவல்துறையினர், அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர். இறுதியில், கண்டெடுக்கப்பட்ட ஒரு கையில் ‘ராகுல்’ எனப் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவே கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டறிய முக்கியத் தடயமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 18-ஆம் தேதி ராகுல் என்பவரை காணவில்லை என அவரது மனைவி ரூபி அளித்திருந்த புகாரும், காவல்துறையினரின் சந்தேகமும் ஒரே புள்ளியில் இணைந்தன.
ராகுல் – ரூபி தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகும் நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரூபியிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், காவல்துறையினரின் சந்தேகம் வலுத்தது. அதே சமயம், இவர்களின் 12 வயது மகளிடம் நடத்திய விசாரணையில், வீட்டிற்கு அடிக்கடி சில நபர்கள் வந்து சென்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, ரூபி தனது காதலன் கௌரவ் என்பவருடன் சேர்ந்து இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது அம்பலமானது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட ரூபி, கௌரவுடன் இணைந்து ராகுலைத் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக உடலைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டியதுடன், சில பாகங்களை கிரைண்டரில் போட்டு அரைத்துச் சிதைத்துள்ளனர்.
அடையாளமே தெரியக்கூடாது என்பதற்காக பாலித்தீன் பைகளில் உடல் பாகங்களை அடைத்து ஊரின் பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்துள்ளனர். தற்போது ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் ஆகியோரை கைது செய்துள்ள காவல்துறையினர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட சுத்தி, கிரைண்டர் ஆகியவற்றைத் தடயங்களாகப் பறிமுதல் செய்துள்ளனர். ராகுலின் தலை உள்ளிட்ட மற்ற பாகங்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



