ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலை பகுதியில் உள்ள ஒன்னகரை கிராமத்தைச் சேர்ந்த சின்னமாதன்-சாந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 12 குழந்தைகள் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு 13ஆவதாக இன்னும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். அது முதல் தொடர்ந்து விவசாயத்துடன் கால்நடைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆரோக்கியம் கருதி குடும்பக்கட்டுப்பாடு குறித்து சுகாதார நலத்துறை அதிகாரிகள் அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது இந்த தம்பதி. 13-வது குழந்தையைப் பெற்று எடுத்ததை அடுத்து இம்முறை வருவாய் மற்றும் காவல்துறையினரும் சுகாதார நலத்துறை அதிகாரிகளோடு சென்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அந்த தம்பதியை சம்மதிக்க வைத்தனர். மூத்த மகளுக்கு திருமணமே முடிந்துவிட்ட நிலையில், தற்போது 13வதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் சாந்தி. அனைத்துமே வீட்டிலேயே சுகப்பிரசவம் தான். ஆனால் குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இவர்கள் தொடர்ந்து குழந்தைகளை பெற்றெடுத்தது தெரியவந்துள்ளது.