மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும் டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணிணை ஆதாருடன் இணைத்துக் கொள்ள தமிழக அரசு ஏற்பாடு இருந்தது. இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ஆதார் உடன் இணைக்க வேண்டும்.
மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம்.
எப்படி இணைப்பது…?
முதலில் ஆதார் எண்ணை, மின்சார எண்ணுடன் ஆன்லைனில் இணைக்க விரும்புவர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும். அந்தப் பக்கத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும். இதையடுத்து, மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட உள்நுழைய வேண்டும். தொடர்ந்து, ஆதார் எண் எனக் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பின்னர், ஆதார் கார்டு புகைப்படத்தை வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக SMS கிடைக்கும்.