அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருந்து வரும் சூழலில், அதிமுகவின் வரவு – செலவு குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த 29.09.2022 தேதியிட்ட, 03.10.2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட, “Audited Annual Accounts FY 2021-22”, தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக கையெழுத்திட்டு, இதை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருக்கிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கிறது எனில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்றது என்பதாகத்தானே பொருள் என எடப்பாடி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலை எடப்பாடி ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தும் சூழலில், இந்தச் செய்தி எடப்பாடி பழனிசாமி தரப்பை உற்சாகமாக்கியுள்ளது. அதேசமயம், இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கிலும் எதிரொலித்தால், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கும் என்ற சூழல் இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.