தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றன. மற்றொருபுறம், இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, வாக்காளர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக முதற்கட்டமாக மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 50 கம்பெனிகள் வரும் மார்ச் 10-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு ஒத்திகைகளை முன்கூட்டியே மேற்கொள்வதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாதுகாப்புப் படைகள் வரவுள்ளது, அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.



