ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், திடீர் திருப்பமாக ஸ்டெபானியின் முன்னாள் காதலனே அவரைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் மறைத்து வைத்துப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் தேதி மாடல் அழகி ஸ்டெபானி பைபர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த மர்மமான மாயம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போலீஸாரின் சந்தேகம் அவரது முன்னாள் காதலன் மீது திரும்பியது. அதன் பேரில் அவரைக் கைது செய்து விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. காதலைக் கைவிட்ட ஆத்திரத்தில், ஸ்டெபானி பைபரைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும், ஸ்லோவேனியா எல்லை அருகே ஒரு சூட்கேஸில் உடலை வைத்துப் புதைத்ததாகவும் போலீஸாரிடம் தகவல் அளித்தார்.
அவர் அளித்த தகவலின் பேரில், போலீஸார் குறியிட்ட இடத்தில் தோண்டியபோது, சூட்கேஸுக்குள் ஸ்டெபானி பைபரின் சடலத்தைக் கண்டெடுத்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலைக்கு சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபரின் தந்தை மற்றும் சகோதரரிடமும் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் நடந்த இந்தச் சம்பவம் ஆஸ்திரியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



