மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி அருகே இன்று காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையிலிருந்து வந்துகொண்டிருந்த பவாரின் விமானம், பாராமதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அஜித் பவார்?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரான இவர், 1991 முதல் பாராமதி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மகாராஷ்டிர சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். கடந்த 2024 ஜூலை மாதம் 8 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தில் இணைந்ததிலிருந்து, அஜித் பவார் மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
தேசியவாத காங்கிரஸ் நிறுவனரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான சரத் பவாரின் அண்ணன் ஆனந்த்ராவ் என்பவரின் மகன் தான் அஜித் பவார்.. இவர் சரத் பவாரின் மனசாட்சியாக இருந்தவர்.. சரத் பவாருக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்பட்டவர்.
கடந்த 1991-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பாரமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அஜித் பவார்.. தனது சித்தப்பா சர்த் பவாருக்காக தனது எம்.பி பதவியை 4 மாதங்களில் அஜித் பவார் ராஜினாமா செய்தார்.. பின்னர் 1991 இடைத்தேர்தலில் பாரமதி தொகுதியில் போட்டியிட்டு அஜித் பவார் வெற்றி பெற்றார். 1991-93 ஆட்சி காலத்தில் மகாராஷ்டிர மாநில வேளாண்மை, மின்சாரம், திட்டமிட துறை அமைச்சராக பதவி வகித்தார் அஜித் பவார்..
பின்னர், அவர் பாராமதி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதன்முதலில் 1991 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார், அதைத் தொடர்ந்து 1995, 1999, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை தொடர்ச்சியாக அத்தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் 1991 முதல் 1992 வரை முதலமைச்சர் சுதாகர்ராவ் நாயக்கின் அரசாங்கத்தில் விவசாயம் மற்றும் மின்சாரத் துறைக்கான மாநில அமைச்சராகப் பணியாற்றினார்.
அஜித் பவாரின் அரசியல் வாழ்க்கை பல அதிரடி திருப்பங்களால் நிறைந்திருந்தது. நவம்பர் 2019-ல், அவர் திடீரெனப் பிரிந்து, பாஜக-வுடன் இணைந்து ஒரு எதிர்பாராத அரசாங்கத்தை அமைத்தார்… அந்த அரசாங்கம் வெறும் 80 மணி நேரம் மட்டுமே நீடித்தது. இது என்சிபி குடும்பத்தில் ஏற்பட்ட முதல் பகிரங்கமான விரிசல் ஆகும்.
ஆனால், ஜூலை 2023-ல், அஜித் பவார் எம்எல்ஏ-க்களின் ஒரு பிரிவை வழிநடத்தி, மீண்டும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்தபோது, அந்தப் பிளவு நிரந்தரமானது… இந்த முறை அவர் துணை முதல்வராகப் பதவியேற்றார். இந்த நடவடிக்கை என்சிபி கட்சியை இரண்டாகப் பிளந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் கட்சிப் பெயரையும் சின்னத்தையும் அவரது பிரிவுக்கு வழங்கியது… இதனால் சரத் பவாரின் விசுவாசிகள் ஒரு புதிய சின்னத்தின் கீழ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.
அஜித் பவாரின் கதை ஒரு சக்திவாய்ந்த மாநிலத் தலைவரின் கதையை விட மேலானது. அது இந்தியாவின் மாறிவரும் அரசியலுக்கு ஒரு கண்ணாடியாக இருந்தது.. கூட்டணிகள் மாறுகின்றன, குடும்பங்கள் பிளவுபடுகின்றன, மற்றும் தப்பிப்பிழைக்கத் தன்னை மறுவரையறை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்க்கையிலும் சரி, தனது அரசியல் பாரம்பரியத்திலும் சரி, அஜித் பவார் ஒருபோதும் ஆட்டத்திலிருந்து வெளியேறியதில்லை.



