போதை பொருள் வழக்கில் தமிழ் திரையுலகில் மேலும் பலர் சிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடிகர் கிருஷ்ணா தனது வக்கீல் மூலம் காவல்துறையிடம் ஆஜரானார்.
நேற்று மாலை முதல் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், அவர் வெளிநாட்டில் இருந்து கொகைனை வாங்கினாரா அல்லது இங்கேயே வாங்கினாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்படி அவர் கையில் கொகைன் வருகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பெசண்ட் நகரில் கலாக்ஷேத்ரா காலனியில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் காவல்துறையினர் இன்று காலை 2 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரின் வீட்டில் இருந்து கிருஷ்ணா பயன்படுத்திய மருந்துகளை காவல்துறையினர் எடுத்து சென்றனர். கிருஷ்ணாவின் வங்கி கணக்குகள், ஜி பே பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் வேறு யாருக்கெலாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கிருஷ்ணாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திரையுலகில் போதை பொருள் பயன்பாடு என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்த சூழலில் போதை பொருள் வழக்கில் தமிழ் திரையுலகில் மேலும் பலர் சிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. குறிப்பாக தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை ஒருவரின் பெயரும் இதில் அடிபடுகிறது. அதே போல் கவர்ச்சி நடிகையாக இருந்து திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நடிகை ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் வீடுகளில் பார்ட்டி நடத்தும் சில பெரிய நடிகர்கள் கூட இதில் சிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உடன் இந்த வழக்கு விசாரணை நிற்குமா அல்லது வேறு பிரபலங்கள் சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Read More : ப்ளே ஸ்டோர் செயலியால் ஆபத்து.. வங்கி தகவல்கள் திருடப்படும் அபாயம்..!! தடுப்பது எப்படி..?