கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று கர்நாடகாவில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கூறியது. தான் தவறு செய்யவில்லை என்று கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், பாதுகாப்பு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இருப்பினும், கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பரிந்துரைத்தது, ஆனால் கமல்ஹாசன் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அவர் நேரடியாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் விளைவாக, கர்நாடகாவில் படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு கர்நாடகா விதித்த “நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடையை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த எம். மகேஷ் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ் இருந்தபோதிலும், கர்நாடக அரசு வாய்மொழி அறிவுறுத்தல்கள் மற்றும் காவல்துறை தலையீடு மூலம் தக் லைஃப் திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டைத் தடுத்ததாக கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. .. திரைப்படத்தை பார்க்க அனைவருக்கும் உரிமை உண்டு.. படத்தை பார்த்து மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கர்நாடக அரசு இதுகுறித்து முடிவு செய்து பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தடையில்லா சான்றிதழ் பெற்ற பின், படத்திற்கான பாதுகாப்பை மாநில அரசு தான் வழங்க வேண்டும். கர்நாடகத்தில் படத்தை திரையிடுவது தொடர்பாகவும், வெளியிட்டால் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கருத்தை மதிப்பதாக கர்நாடக அரசு கூறியது.
இந்த நிலையில் தக்லைஃப் படம் வெளியிடுவது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்த கன்னட அமைப்புத் தலைவரின் வீட்டில் பெங்களூரு காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் போராட்டம் அல்லது தர்ணா நடந்தால் அல்லது வேறு எந்த இடத்திலும் போராட்டம் நடத்தப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கன்னட ஆதரவு அமைப்புத் தலைவர் பிரவீன் ஷெட்டியின் வீட்டில் காவல்துறை ஒரு அறிவிப்பை ஒட்டியுள்ளது. இதனால் கர்நாடகாவில் இன்று தக்லைஃப் படம் இன்று கர்நாடகாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..